ஆப்பிரிக்க நாடோடிப் பாடல்கள் தொகுப்பு வாசிக்க வாய்த்தது. வாசிக்க வாசிக்க ஒரு மட்கிய இலை போல் என்னை உணர்கிறேன் .ஒவ்வொன்றும் எவ்வளவு சத்துள்ள வரிகள்.முதலில் ஒரு காதல் பாடல்
சிற்றிளம் பெண்ணவள்
தன் கருக்கல் நட்சத்திர
மெல்லிமைப்பால் நாணமுலர்த்துவாள்
வளர்ந்த சோளக் கதிரருகே
மடிந்த கீற்று அவள் கழுத்து
சினைக்காத ஆட்டின் மடியொத்து
இண்டிகோ கேக்கின் திண்மையில்
மார்பகம் தாங்கி
ஃபுலானிகளின் தட்டைக் காலணிகள்
ஒத்த இழைந்த உதரம்
மூப்பனின் கணையாழி
போல் தளரப் பற்றி விடக் கூடும்
பிடி இடையை
நைஜர் நதியில் நிலா
தவறிய மூக்குத்தி போல்
மிதக்கும்
இப்பின்னிரவின் மறுகரையில்
காத்திருக்கக் கூடும் அவள்
தன் கருக்கல் நட்சத்திர
மெல்லிமைப்பால் நாணமுலர்த்திய படி

1 comments:
pidichirukku..
vaazhthukal mithran sir.
Post a Comment